பண்டைய தமிழ் இலக்கியங்கள் சோழ, பாண்டிய மக்களை மட்டுமல்லாது சேர நாட்டு மக்களையும் தமிழர்களாக நம் உற்ற மக்களாகவே கண்டுள்ளது. இதற்கு மிகச்சிறந்த சான்றாக சிலப்பதிகாரம் உள்ளது. தமிழனின் வீரத்தைப்பற்றி கூறும் ஒரு பகுதியில் சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலை எடுத்து கோவில் கட்ட இமயத்திலிருந்து கல் எடுத்துவந்த நிகழ்வை எடுத்துக்காட்டாக கூறலாம். சிலப்பதிகாரம் - வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றி பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணி, அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகாது என்று எண்ணினான். வடநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்கு சென்ற சமயம் தமிழ் மன்னர்களை வடநாட்டு வேந்தரான கனக விசயர் எள்ளி நகையாடினார். அவருடன் போர்புரிந்து வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களை வைத்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவர் முடிவு செய்தார்.
இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல்வைத்து கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் செய்திகள்.
இன்றும் அந்த கண்ணகி கோவிலில் தமிழ்நாட்டு மக்களும், கேரளமக்களும் பொங்கலிட்டு வணங்கிவருகின்றனர். பண்டைய காலத்திலிருந்து இன்று வரை தமிழ்நாட்டு மக்களும், கேரள மக்களும் ஒற்றுமையுடன் இருப்பதற்கு சிலப்பதிகாரமும், கண்ணகி கோவிலும் மிகச்சிறந்த சான்று. இப்படி ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே அரசியலை புகுத்தி வேடிக்கை பார்ப்பது நியாயமா..??!! மனிதனாகப் பிறந்து தமிழ், மலையாள மக்களுக்கு தெய்வமாய் விளங்கும் அந்த கண்ணகிக்குதான் வெளிச்சம்...

