Wednesday 25 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 3: ககோளம் - பூகோளம்



ககோளம் - பூகோளம்

மீனாக்ஷி அம்மன் கோவிலில் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்.

 

ககோளம்

சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (1 யோசனை = 24 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதை சுற்றி, 2700 யோசனைபரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம்வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஓவியத்தில்,
  • அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி,
  •  புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதி
  •  திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி,
  •  ஹஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி
  •  விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி,
  •  மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.

பூகோளம்

இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம்.

Tuesday 24 April 2012

குபேர பூஜை

தீபாவளி, அக்ஷய த்ரிதியை, வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி போன்ற நாட்களில் மாலை குபேரனை நினைத்து பூஜை செய்வதால் செல்வம் பெருகும், குடும்பம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.



குபேரனின் திருஉருவப்படத்திற்கு முன் பணம், பொருள் வைத்து பூமாலை சாற்றி 12 அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பூ, அட்சதை கையில் எடுத்துக்கொண்டு 12 முறை இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

த்வாதஸ லிங்கஸ்துதி

சௌராஷ்ட்ரே
ஸோமனாதஞ்ச ஸ்ரீசைல்யே
மல்லிகார்ஜூனம் உஞ்சைன்ய
மஹாகாளீம் ஓங்கார மமலேஸ்வரம்
பால்யம் வைத்யனாதஞ்ச டாகின்யாம்
பீமஸங்கரம் ஸேது பந்தேது ராமேஸம்
நாகேஸம் தாறுகாவனே
வாரணஸ்யாம்ஸூ விஸ்வேஸம்
த்ரியம் பகம்கௌதமீதடே
ஹிமாலயேது கேதாராம் குஸ்மேஸஞ்ச
சிவாலயே ஹேதானி ஜ்யோதி லிங்கானி
ஸாயங்கால ஹபடேர் நித்தயம்
ஸப்த ஜன்மக்ருதம் பாபம்
ஸ்மரணேன வினிஸ்யதி:

குபேர நாமாவளி

ஓம் குபேராய நம:
ஓம் நரவாகனாய நம:
ஓம் சிவஸகாய நம:
ஓம் ஸ்ரீநிவாச ஸந்துஸ்டாய நம:
ஓம் பம்மாவதி ப்ரிய அனுஜாய நம:
ஓம் யக்ஷராஜாய நம:
ஓம் தனதான்யாதிபதயே நம:
ஓம் மணி பத்ரார்ச்சிதாய நம:
ஓம் மான்யாய நம:
ஓம் மஹனீயாய நம:
ஓம் மஹார்ஹ மணி பூஷணாய நம:
ஓம் ஸ்ரீவித்யா மந்த்ர உபாஸஹாய நம:
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகா ப்ரிய பக்தாய நம:
ஓம் திக்பாலாய நம:
ஓம் நவநாயகாய நம:
ஓம் நிதினாம் பதயே நம:



பின் பால் பாயசத்தை நைவேத்யம் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து, குங்குமத்தை கரைத்து அதையும் ஆரத்தி எடுத்து நிறைவு செய்ய வேண்டும்.
குடும்பத்தில் அனைவரும் இதில் கலந்துகொண்டு செய்வது நல்லது.
பூஜை முடிந்தவுடன் எல்லோரும் குபேரன் திருஉருவப்படத்திற்கும், பணம் பொருளிலும் அட்சதை தூவி நமஸ்கரிக்க வேண்டும்.

மற்றவர்களையும் அட்சதைபோட சொல்லி அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் தருதல் நல்லது.






Monday 9 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 2

48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை 

மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக  மூடப்பட்டு இருந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின்போது அம்பாளையும், சுவாமியையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. 

கோயில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை கற்சுவர் கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்த சிலைதான் சுந்தரேஸ்வரர் என்று நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. 

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்தது. 

சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் உள்ளது. அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம் பெற்றுள்ளது.

மாதப்பெயர்களில் வீதிகள் 

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிற கோவில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின் போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருள்கிறார்களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச்சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது.


இதில் ஆவணிவீதி மட்டும் ஆவணி மூல வீதி என்று அழக்கப்படுகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே, ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின்போது சுவாமி ஆவணி மூலவீதியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

முதல் திருவிளையாடல்

மதுரையில் சிவபெருமான், 63 திருவிளையாடள்களை நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பௌர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிகாலத்தில்சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.

Friday 6 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 1


விபூதி விநாயகர்
 
தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுளையும்போது பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் விபூதியை விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. 'விபூதி' என்றால் 'மேலான செல்வம்' என்று பொருள். இவரை வணங்கினால் வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் எனும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டை விநாயகர்


மீனாக்ஷி அம்மன் சன்னதிக்கு இடது புறத்திலும், பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இரட்டை விநாயகரை வழிபட்டால் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை



முக்குறுணி விநாயகர்

மீனாக்ஷி அம்மன் திருக்கோவிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி (6கிலோ). விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது. அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாக்ஷி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார் இந்த விநாயகர் முன்பு உள்ள் நிலை விளக்குகளில் திருமலைநாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.

Thursday 15 March 2012

பாரதியின் வாழ்வியல்


ஆன்மிகம் பற்றி நவீன தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் பாரதியார்தான். பாஞ்சாலி சபதம், பகவத்கீதை ஆகியவற்றை புதிய தமிழில் அவரே வடித்துக் கொடுத்தார்.

ஆன்மிகத்தைத் தனி மனிதன் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து ஆன்ம ஒளி பெறவேண்டும் என்பதற்காக தன் எழுத்தைச் செலவிட்ட மறுமலர்ச்சி எழுத்தாளர்களுள் பாரதியே முதலிடம் பெறுகிறார்.



பாரதியின் பிரார்த்தனை

கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!

பாரதியின் சங்கல்பம் 

பொழுது வீணே கழிய இடங்கொடேன். லௌகிகக் காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.

மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன். மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.

சர்வ சக்தியுடைய பரம்பொருளை தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில் போல் இயங்குமாறு சூழ்வேன்.

பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.

எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சிந்தனை இவற்றோடிருப்பேன்.

பாரதி போற்றும் மனிதன் 

வஞ்சனை, கபடம் என சமயத்திற்கேற்ப பிழைப்பவன், நரி.

ஊக்கமின்றி ஏதேனுமொன்றை நினைத்துக்கொண்டு மனம் சோர்ந்திருப்பவன் தேவாங்கு.

மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.

தர்மம், புகழ் போன்றவற்றைப் பற்றி கவலையின்றி அற்ப சுகங்களில் மூழ்கிக் கிடப்பவன் பன்றி.

சொந்தமாக பிழைக்காமல், அந்த அக்கறை இன்றி பிறருக்குப் பிரியமானவனாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுப்பதைக்கொண்டு வயிறு வளர்ப்பவன் நாய்.

அறிவின் துணைகொண்டு பெரும் பொருளைச் சேர்க்கும் வழியின்றி, முன்னோரின் சாஸ்திரங்களை, பெருமைகளை மட்டுமே வாயினால் அடிக்கடி திரும்பத் திரும்பக் கூறுபவன் கிளிப்பிள்ளை.

பிறர் நம்மை எவ்வளவு அவமதித்தாலும், அந்த அக்கிரமத்தைத் தடுக்க முயற்சி செய்யாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன், கழுதை.

வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் வான்கோழி.

தான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்துச் சாப்பிடாமல் பிறரின் சொத்தை அபகரித்து உண்டு வயிறு வளர்ப்பவன் கழுகு.

ஒரு நவீன உண்மை வரும்போது அதனை ஆவலோடு அங்கீகரித்து அறிந்து கொள்ளாமல்,அதனைக் கண்டு வெறுப்படைகிறவன் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும் ஆந்தையைப் போன்றவன்.

ஒவ்வொரு நிமிஷமும் சத்தியத்தைப் பேசி, தர்மத்தை ஆதரித்து, பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதனென்றும் தேவனென்றும் சொல்லுவதற்கு உரியவன் ஆவான்.